2023-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
2024 ஆம் ஆண்டிலிருந்து தேசிய மதிப்பீட்டுக் கொள்கையை அரசாங்கத் துறையில் அமுல்படுத்துதல் - 2024 ஆம் ஆண்டிலிருந்து தேசிய மதிப்பீட்டுக் கொள்கையை அரசாங்கத் துறையில் அமுல்படுத்துவதற்குத் தேவையான ஆரம்ப வேலைத்திட்டங்கள் திறைசேரியின் கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பு திணைக்களத்தினால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த மதிப்பீட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொருட்டு புதிய நிறுவனமொன்றைத் தாபிக்காமல் தற்போதுள்ள நிறுவன முறைமையினுள்ளேயே நிறுவன ரீதியிலான கட்டமைப்பொன்றை உருவாக்குவது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. அதேபோன்று மேற்கொள்ளப்படும் மதிப்பீடுகளுக்கான சிபாரிசுகள் வருடாந்தம் அமைச்சரவைக்கும் அதன் பின்னர், ஏற்புடைத்தானவாறு பாராளுமன்றத்திலும் சமர்ப்பிப்பதற்கும் மதிப்பீட்டு செயற்பாடுகளின் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் சுயாதீனமான தீர்மானங்களை எடுப்பதற்கும் இயலுமாகும் வகையில் நிலையான தேசிய மதிப்பீட்டு குழுவொன்றை தாபிக்கும் தேவையும் இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளரின் தலைமையில் தேசிய மதிப்பீட்டு வழிநடத்தல் குழுவொன்றை நியமிப்பதற்கும் இந்த குழுவின் மதிப்பீடுகளின் போது கண்டறியப்படும் விடயங்கள் தொடர்பிலான தகவல்கள் மற்றும் அதன் சிபாரிசுகளை அமைச்சரவைக்குச் சமர்ப்பிப்பதற்கும் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |